Monday 9 November 2020

கோப்பாய் – கைதடி பாலம் பழுது: 20 கி.மீ வேகத்தில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது..!!!

SHARE


கோப்பாய் – கைதடி பாலத்தில் பழுது காணப்படுவதாக முகப்புத்தக பதிவை அடிப்படையாகக் கொண்டு குறித்த பழுது உடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் சீர் செய்யப்பட்டுள்ளமை முன்னுதாரணமாகியுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இளைஞர் ஒருவரினால் கைதடி – கோப்பாய் வீதியில் பாலத்தின் தகடுகளில் சற்று விலகல் காணப்படுவதாக பதிவு ஒன்று படத்துடன் இடப்பட்டிருந்தது. அதனை அவதானித்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் யாழ் வலயத்திற்குப் பொறுப்பான நிறைவேற்றுப் பொறியியலாளர் எஸ்.இராதாக்கிருஸ்ணனின் கவனத்திற்கு தொலைபேசியில் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் மறுநாளுக்கு இடையில் குறித்த பாலத்தில் காணப்பட்ட விலகல்கள் உலோக ஒட்டுவேலைகள் மேற்கொள்ளப்பட்டு சீர்செய்யப்பட்டதுடன் பின் பிரதேச சபைக்கும் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பொறியிலாளரினால் தற்போது காணப்படும் பாலம் உலோகத்தினாலானதாகக் காணப்படுவதனால் அப் பாலத்தில் வேகக் கட்டுப்பாடு அவசியம் எனவும் கூடியது 20 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கவும் சகலருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேசத்தின் எல்லைகளில் கடல்நீரேரி பாலங்களே உள்ளன. அவற்றுள் யாழ் பருத்தித்துறை வீதியில் உள்ள வல்வை பாலம், புத்தூர் – மீசாலை வீதியில் உள்ள பாலம், கோப்பாய் கைதடி வீதியில் உள்ள பாலம் போன்றன உலோக பாலங்களாகவும் நீண்ட கால பழைமை அடைந்தவையாகவும் உள்ள நிலையில், பாலங்களுக்கான ஒழுங்குவிதிகளை உயர்ந்தளவில் பின்பற்றி வேகத்தணிப்புடன் வாகனங்கள் செலுத்த கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE