கொரோனாவின் தாக்கங்களை 3 ஆண்டுகளுக்கு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் : பவித்ரா..!!!


கொவிட் -19 வைரஸ் பரவலை இப்போது கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வந்தாலும் கூட மீண்டும் கொரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாம் கொவிட் -19 வைரஸ் தாக்கங்களுக்கு முகங்கொடுத்தாக வேண்டும் எனவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

கொவிட் -19 வைரஸை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் நாம் அரசியல் சார்ந்து செயற்படவில்லை. உலக சுகாதார ஸ்தாபனமும் தொடர்ச்சியாக இதனை வலியுறுத்தி வருகின்றனர்.

எனவே தான் தீர்மானங்கள் முடிவுகள் எடுக்கும் வேளைகளில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய செயற்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் நாம் இயங்கினோம்.

இதன்போது சுகாதார அதிகாரிகள், நிபுணர்கள் எமக்கு வழங்கும் அறிவுரைகளுக்கு அமைய அரசாங்கம் தீர்மானம், முடிவுகளை எடுத்தது. எனவே நாம் இப்போது வரையில் மிகவும் பொறுப்புடன் தீர்மானங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

யாரும் ஒரு நோயாளர் என அடையாளம் காணப்படும், சந்தேகிக்கப்படும் நபருக்கு  12 நாட்களுக்கு பின்னரும் எந்தவொரு நோய் மாற்றங்களும் காட்டாது போனால் அவர்களுக்கு நோய் தாக்கம் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. ஆகவே அவர்களுக்கு பி.சி.ஆர் செய்ய தேவையும் இல்லை.

எனவே அவர்களை  வீடுகளுக்கு அனுப்ப முடியும். ஆனால் நாம் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்த  தீர்மானம் எடுத்துள்ளோம். எனினும் இந்த வைரஸ் உலகிற்கு புதிய வைரஸ்.

எனவே நாம் பி.சி.ஆர் பரிசோதனைகளில் வரும் தகவலைக் கொண்டு தொற்றுநோயாளர் என அடையாளப்படுத்தினோம். ஆனால்  இன்று அவ்வாறு அல்ல. சிறுது சிறிதாக இந்த நோய் குறித்து கண்டறியப்பட்டு வருகின்றது. எனவே உடனடியாக நடைமுறைப்படுத்தும் தீர்மானங்கள் அவசியமாகும்.

இலங்கையில் ஒரேயொரு தொற்றுநோய் வைத்தியசாலையே  இருந்தது, எனினும் கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் இப்போது 33 வைத்தியசாலைகளை உருவாக்கியுள்ளோம். அதேபோல் எம்.ஆர்.ஐ வசதிகள் கொண்ட ஒரேயொரு ஆய்வு மையமே இருந்தது. இப்போது 25 பரிசோதனை மையங்கள் உள்ளன.

இந்த பரிசோதனை மையங்களின் மூலம் இப்போது வரையில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பி.சி.ஆர் பரிசோதனைகள்  செய்யப்படுகின்றன. எனவே நிலைமைகளை கட்டுப்படுத்த நாம் ஆயுத்தமாக உள்ளோம். நாட்டில் சந்தேகமாக உள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக பி.சிஆர் பரிசோதனை செய்து வருகின்றோம்.

இப்போதுள்ள நிலைமையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும், ஆனால் அதற்கு மக்களின் ஒத்துழைப்புகள் அவசியம். இப்போது நிலைமைகள் கட்டுபடுத்தப்பட்டாலும் கூட மீண்டும் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படலாம்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த நிலைமைகளுக்கு சகலரும் முகம் கொடுத்தாக வேண்டும். எனவேதான் வெளிநாட்டவர்கள் எவரையும் நாட்டுக்குள் அனுமதிக்காது உள்ளோம். எம்மால் முடிந்தளவு முன்னாயத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

மீண்டும் எப்போதும் வைரஸ் பரவலாம். எனவே நாடு முழுமையாக விடுவிக்கப்பட்டாலும் மீண்டும் வைரஸ் தொற்றுக்கான அச்சுறுத்தல் உள்ளது. எவ்வாறு இருப்பினும் ஏனைய நாடுகளை விடவும் நாம் ஆரோக்கியமான நிலையில் உள்ளோம். உலக வங்கியின் 128 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இப்போது வரையில் 57 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வைத்தியசாலை அபிவிருத்தி, வைத்திய அதிகாரிகளின் தேவைகளுக்காக செலவு செய்துள்ளோம். இந்த கடன் தொகையை 2023 ஆம் ஆண்டில் செலுத்தி முடிக்கவேண்டும். அதேபோல் கொவிட் நிதியாக சேகரித்த தொகைக்கு என்ன நடந்தது என்பதை பின்னர் கூறுகின்றேன் என்றார்.
Previous Post Next Post


Put your ad code here