கொரோனா நோயானது, தற்போது சமூகத்தில் வலுவாக பரவுவதால் அது சிறுவர்களைத் தாக்கும் போது சிறுவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என யாழ் மாவட்ட போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயும் சிறுவர்களும் தொனிப்பொருளில் கருத்துரைக்கும் போது சி.யமுனாநந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்....
இதேநேரம் சிறுவர்களுக்கு சாதாரணமாக இருமல் தடிமன் அஸ்மா போன்ற நோய்கள் இருக்கும் பொழுது அவர்களுக்கு கொரோனா என்ற பயத்தில் சிகிச்சைகள் பின் செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.
ஏற்கனவே அஸ்மா நோய் உள்ளவர்களுக்கு உரிய மருந்துகள் கிரமமாக கொடுக்கப்பட வேண்டும். அதே போல தூசிகளுக்குள் விளையாடும் பொழுது தொண்டை அழற்சி நோய்கள் ஏற்படலாம். சிறுவர்களுக்கு அவ்வாறு வரும் போது அதற்குரிய மருந்து கொடுக்க வேண்டும். அடுத்து, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் சிறந்த போசணை மிக்க உணவுகளை சிறுவர்களுக்கு வழங்குவதன்மூலம் தொற்று ஏற்படும் காலங்களில் உடல்நிலை பாதிப்பதை தவிர்க்கலாம்.
குறிப்பாக புரதச்சத்து நிறைந்த பால் போன்றவற்றை எடுத்தல் வேண்டும். எனவே குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும் பொழுது காய்ச்சல் இருக்கலாம், தொண்டை நோ இருக்கும் ,இருமல் இருக்கலாம், எனவே இவற்றை வைத்தியரின் ஆலோசனைப்படி கலந்தாலோசித்தல் வேண்டும் என்றார்.
மேலும், வீட்டில் குழந்தை உள்ளவர்கள் பொது இடங்களுக்கு சென்றுவிட்டு வந்து கைகளை நன்றாக கழுவி விட்டு வீட்டுக்குள் செல்ல வேண்டும். வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுமாயின் பெரியவர்கள் அல்லது அங்கு உள்ள மூத்தவர்கள் தான் காரணமாக இருக்கலாம் எனவே அதற்குரியவாறாக அவதானமாக செயற்பட வேண்டும்.
அதேபோல சிறுவர்களை வெளியிலிருந்து வருபவர்கள் கட்டி அணைத்து முத்தமிடுதல் போன்ற செயற்பாடுகளை தவிர்த்தல் வேண்டும். அவ்வாறு செய்வதானால் கைகளை நன்றாக கழுவுதல் வேண்டும் கண்டபடி ஆட்கள் வந்து குழந்தைகளை தொடுதலும்தொற்றை ஏற்படுத்தும்.
குறிப்பாக நெருக்கமான இடங்களில் அயல் உள்ளவர்களுடன் விளையாடும்போதும் தொடுகையின் கொரோனா தொற்று ஏற்படலாம். எனவே தற்போதைய சூழ்நிலையில் சுகாதார பழக்கவழக்கங்களான கைகளை கழுவுதல் போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுதல் நல்லது என்றார்.
அதேபோல் உணவு பழக்கவழக்கத்தை பொறுத்தவரை பழரசங்கள் கூடுதலாக நல்லது, குழந்தைகளுக்கு நெத்தலி, கருவாடு, பால், பெருங்காயம், இஞ்சி ,மஞ்சள், போன்றவற்றை உணவில் சேர்ப்பதும், அடுத்ததாக அயடின் கூடிய பழங்கள், எலுமிச்சம் பழம் மற்றும் கொய்யாப்பழம், வாழைப்பழம், என்பவற்றிற்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. அடுத்ததாக நீர் ஆகாரங்கள் போன்றவை சிறு பிள்ளைகளுக்கு போதிய நிறைவாக ஆதாரமாக அமையும் என தெரிவித்தார்.
