கிளிநொச்சியில் தற்காலிக வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்து சிறுவன் ஒருவன் பலியாகியுள்ள சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் 8 வயதான நிரோயன் றுசாந்தன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தொண்டமான்நகர் பகுதியில் உள்ள இவ் வீட்டில் காலை தாயார் உணவு தயாரித்துக்கொண்டிருந்தபோது உயிரிழந்த சிறுவன் உணவருந்திக்கொண்டிருந்துள்ளான்.
இதன்போது திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாட்டுக்குள் சிக்கிய சிறுவன் அயலவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டான். எனினும் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் சிறுவன் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மை நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக இப் பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் நிலம் ஈரமாக காணப்பட்டதால் சுவர் வீழ்ந்துள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை இந்த பகுதியில் வெள்ள நீர் தேங்குவது தொடர்பில் பல்வேறு தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் வருடம் தோறும் 40 குடும்பங்கள் வரை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கரைச்சி பிரதேச சபையிடம் இப் பகுதிக்கான வடிகாலமைப்பு வசதியினை ஏற்படுத்தி தருமாறு பலமுறை கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை தீர்வு எட்டப்படாத நிலையில் இன்று ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் கடந்த அரசின் காலத்தில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தின் மிகுதி பணம் வழங்கப்படாமையினாலேயே நிரந்தர வீட்டுக்குள் செல்ல முடியாது, தற்காலிக வீட்டில் தங்கியிருந்ததாகவும், எனவே மிகுதி பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:
sri lanka news