Thursday 12 November 2020

கொழும்பு – யாழ். பொருள்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவோருக்கு நாளை யாழ்ப்பாணத்தில் சிறப்புக் கூட்டம்..!!!

SHARE


கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலமையில் யாழ்ப்பாணம் – கொழும்பு அத்தியாவசியப் பொருள்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற வாகனங்களின் உரிமையாளர்கள், வர்த்தகர், சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கு நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் ஆராயும் சிறப்புக் கூட்டம் யாழ்ப்பாணம் வணிகர் கழக மாநாட்டு மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

எனவே அத்தியாவசியப் பொருள்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற வாகனங்களின் சாரதிகள் மற்றும் உதவியாளர்களின் பெயர் விவரங்களுடன் வாகன உரிமையாளர்கள் அல்லது வர்த்தகர்கள் இந்தக் கூட்டத்திற்கு கட்டாயம் சமூகமளிக்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் தலைவர் ஆர்.ஜெயசேகரம் கேட்டுள்ளார்.

“நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகின்றதால் பல இடங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளதுடன் பல கட்டுப்பாடுகள் நடைமுறைகள் என்பன விதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலமையில் கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

அதனடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் அத்தியாவசிய பொருள்கள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபட்டுள்ள மற்றும் பொதிகள் கொண்டு செல்கின்ற அல்லது கொண்டு வருகின்ற வாகனங்களின் உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு சுகாதாரப் பிரிவினர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையிலான சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று நாளை நடைபெறவுள்ளது.

ஆகையினால் இத்தகைய போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டுள்ள அல்லது ஈடுபடுகின்ற வாகனங்களின் சாரதிகள் மற்றும் உதவியாளர்களின் பெயர் விவரங்களுடன் இந்தக் கூட்டத்திற்கு வாகன உரிமையாளர்கள் அல்லது வர்த்தகர்கள் கட்டயாம் சமூகமளிக்க வேண்டும்.

மேலும் போக்குவரத்திற்கு சில நடைமுறைகள் அல்லது கட்டுப்பாடுகள் குறித்து சுகாதாரப் பிரிவினர் சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கு தெளிவுபடுத்த உள்ளனர். இவ்வாறான புதிய நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதால் அத்தியாவசிய பொருள்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றவர்கள் இக் கூட்டத்தில் அவசியம் பங்குபெற வேண்டும்” என்று யாழ்ப்பாணம் வணிகர் கழகத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE