Monday 16 November 2020

வடமாகாணத்திற்கு வெளியே இறந்தவரின் மரண சடங்கை செய்ய அனுமதி பெற வேண்டும்..!!!

SHARE


வடமாகாணத்திற்கு வெளியே ஒருவர் மரணித்தால் அந்த உடலை வடமாகாணத்திற்கு கொண்டுவந்து இறுதிச் சடங்கை நடாத்த வேண்டுமாயின் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ள பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரியின் முன் அனுமதி பெறப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் திணைக்களத்தின் வடமாகாண பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

இந்த அனுமதியை வழங்குவதற்காக இறந்தவரின் விபரங்கள், இறப்பு ஏற்பட்ட வைத்தியசாலை அல்லது இடம்போன்ற விபரங்கள் சுகாதார வைத்திய அதிகாரிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவர் இறப்பு ஏற்பட்ட வைத்தியசாலையைத் தொடர்பு கொண்டு கொரோனா தொற்றினால் இறப்பு ஏற்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டே அனுமதி வழங்கப்படும்.

கொரோனா தொற்றினால் இறப்பு ஏற்பட்டிருந்தால் அல்லது அவ்வாறு இறப்பு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டால் மிக இறுக்கமான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியே இறுதிச் சடங்கு செய்வதற்கு அனுமதி வழங்கப்படும். உடல் மின்சார தகன இயந்திரத்திலேயே எரியூட்டப்பட வேண்டும்.

உடலம் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு ஆகக் கூடியது 3 மணித்தியாலம் மட்டுமே வீட்டில் வைத்திருக்க அனுமதிக்கப்படும்.

குடும்பத்தினர் மட்டுமே இறுதிச் சடங்கில் பங்குபற்றலாம்.

அவர்கள் அனைவரும் 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர். அண்மையில் கொழும்பில் உயிரிழந்த ஒருவரின் உடலம் முன் அனுமதி பெறப்படாது கொழும்பிலிருந்து பாதி வழியில் வரும்போதே சுகாதார வைத்திய அதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனால் சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்களும், குடும்பத்தினரும் பாரிய சிரமங்களுக்கும், அசௌகரியத்திற்கும் உள்ளாகியுள்ளனர். எனவே வேறு மாகாணத்தில் இறப்பு ஏற்பட்டு வடமாகாணத்தில் இறுதிச் சடங்கு நடத்த விரும்பினால் முன்கூட்டியே சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதி பெற்றபின் உடலத்தை இங்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றோம்.

SHARE