யாழ்ப்பாணம், கிளிநொச்சிப் பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் வழமைக்கு..!!!


யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் நாளை இடம்பெறும் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்  இ.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நவம்பர் 24ஆம் திகதி மூடப்பட்ட கிளிநொச்சி மாவட்டப்பாடசாலைகள் இரண்டு வாரங்களின் பின்னர் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன.

கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் தீர்மானத்தின் பிரகாரம் தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்களுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 23ஆம் திகதி தொடக்கம் இடம்பெற்று வருகின்றன.

எனினும் கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டநிலையில் சுகாதாரத் துறையின் ஆலோசனைக்கு அமைய அந்த மாவட்டப் பாடசாலைகள் நவம்பர்24ஆம் திகதி தொடக்கம் மூடப்பட்டன.

வட மாகாணத்தில் கடந்த டிசெம்பர் 2ஆம் திகதி ஏற்பட்ட புரேவி புயல் காரணமாக நவம்பர் 3, 4ஆம்திகதிகளில் மாகாண பாடசாலைகள் அனைத்துக்கும் ஆளுநரின் அறிவிப்புக்கு அமைய விடுமுறை வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்கள் அதிகளவு மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட வெள்ளத்தினால் இன்று திங்கட்கிழமையும் இரண்டு மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் கல்வி அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் பாடசாலைகள் நாளை இடம்பெறும் என்று மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

மாணவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அவர் கேட்டுள்ளார்.

Previous Post Next Post


Put your ad code here