இலங்கையில் இதுவரை காலமும் முதலாவது சிறுபான்மை இனமாக இருந்த தமிழர்கள் 2031 ஆம் ஆண்டளவில் இரண்டாவது சிறுபான்மை இனமாக தமிழர்கள் காணப்படுவார்கள் என சமூதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட வெகுஜன அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழர்களின் எதிர்காலம் ஒரு குடித் தொகையியல் நோக்கு எனும் நிகழ்வில் பிரதம வளவாளராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
தமிழ் மக்களின் சனத் தொகை பெருக்க வீதம் வருடா வருடம் குறைவடைந்தே செல்கிறது. யுத்தம், நலிவுற்ற பொருளாதாரம், புலம் பெயர்வு, காலம் பிந்திய திருமணம், குடும்ப கட்டமைப்பு சிதைவுகள், நாகரீகம், கருத்தடைகள், குடும்ப கட்டுப்பாடுகள், என பல்வேறு காரணிகளை கூறிக்கொண்டே போகலாம். இந்த காரணிகளால் தமிழர்களின் சனத் தொகை குறைவடைந்து செல்கின்றமையை நாம் கண்முன்னே காண்கின்றோம், வடக்கு கிழக்கில் தமிழ் பாடசாலைகளில் தரம் ஒன்றில் இணைந்துகொள்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் குறைவடைந்து செல்கின்றமையை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.இது எமது இனத்திற்கு ஆபத்தானது.