வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் 4 பேர் யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 485 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
அவர்களில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேரும் மன்னார் மாவட்டத்தில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவரும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து சென்றுள்ளார். மற்றையவர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்டவர்.
புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடையவர்கள். இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.
மேலும் மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்