புதுவருட பிறப்பின் பின்னர் கொரோனா மூன்றாம் அலைக்கு முகங்கொடுக்க நேரிடும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்..!!!


உயிர்த்த ஞாயிறு மற்றும் சித்தரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு உரிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிடாவிட்டால் புதுவருட பிறப்பின் பின்னர் கொவிட் பரவலின் மூன்றாம் அலைக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தலைவர் உபுல் றோஹண காணொளியொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைவரங்களின் அடிப்படையில் போக்குவரத்து கட்டுப்பாடு தொடர்பான எவ்வித தனிமைப்படுத்தல் விதிகளும் வெளியிடப்படவில்லை. போக்குவரத்து நடவடிக்கைகள் வழமையைப் போன்று நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியிலேயே உயிர்த்த ஞாயிறு மற்றும் சித்திரைப்புத்தாண்டு பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக உலகில் பிரேசில் போன்ற நாடுகளில் எதிர்பாராத வகையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

அந்நாடுகளுக்குக் கூட வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் நாம் பண்டிகைகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றோம். எனவே உயிர்த்த ஞாயிறு மற்றும் சித்தரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு உரிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிடாவிட்டால் புதுவருட பிறப்பின் பின்னர் கொவிட் தொற்றின் மூன்றாம் அலைக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்.

எதிர்வரும் நாட்களில் காணப்படுகின்ற அபாய நிலைமையைக் கருத்திக் கொண்டு உரிய சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை உள்ளடக்கி போக்குவரத்தினை ஓரளவிற்கேனும் கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்டிகைகளின் போது மக்களுக்கு கொவிட் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மே மாத இறுதியில் அல்லது ஜூனில் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பது தெளிவாகிறது என்றார்.
Previous Post Next Post


Put your ad code here