சுகாதாரத் தொண்டர்கள் வீதிமறியல் போராட்டம்; யாழ்.நகரில் ஏ-9 வீதியூடான போக்குவரத்து பாதிப்பு..!!!


வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டிந்த நிலையில் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு யாழ்ப்பாண காவல்துறையினர் மாற்று வீதியால் பயணத்தினை மேற்கொள்ளுமாறு சாரதிகளிடம் தெரிவித்திருந்தனர்.

கடந்த முதலாம் திகதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்த வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் தமக்கான தீர்வு வழங்காத நிலையில் கடந்த 8 ஆம் திகதி தொடக்கம் தமது போராட்ட வடிவத்தை உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றி முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டம் இடம்பெறுகின்ற இடத்திற்கு ஒரு சில தமிழ் அரசியல் பிரதிநிதிகள் வருகைதந்திருந்த போதிலும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் இதுவரை வருகை தரவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொண்டர்களாக கடமையாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் முகமாக சுகாதார பணியாளர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

எனினும் குறித்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக குறித்த நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில்,

நிரந்தரநியமன கடிதம் பெற்ற சுகாதார பணியாளர்கள் 454 பேர் தமக்கு உரிய தீர்வினை வழங்குமாறும் நீண்ட காலமாக தொண்டு அடிப்படையில் வைத்தியசாலைகளில் கடமையாற்றியதாகவும், எனவே தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here