Sunday 17 October 2021

கேரளாவில் கனமழை: 18 பேர் உயிரிழப்பு; மண்ணில் புதைந்த 22 பேரை தேடும் பணி தீவிரம்..!!!

SHARE

கேரளாவின் தென்கிழக்கு அரபி கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளா முழுவதும் கன மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. தொடர் மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

கேரளாவில் நேற்று பெய்த மழை, கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தை நினைவு படுத்தியதாக கேரள மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.

கன மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

கூட்டுக்கல், பெருவந்தனம் கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தது. இதில் இருந்தவர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்துச் சென்று அவர்களை மீட்டனர்.

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி உடனடியாக நடந்தாலும் இன்னும் 22 பேரை காணவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அங்கு கடற்படை மற்றும் இராணுவத்தினர் மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மழைக்கு கோட்டயம் மற்றும் இடுக்கியில் 2 பெண்களும், ஒரு குழந்தையும் இறந்துள்ளனர்.

இது போல தொடுபுழா அருகே அரக்குளம் ஆற்றுப்பாலத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கிய கார், அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

காரில் இருந்த பெண் உட்பட 2 பேர் பலியாகியுள்ளனர்.பெண்ணின் உடல் காணியாந்தோடு பகுதியில் மீட்கப்பட்டது. அவருடன் இருந்தவரின் உடலை தேடும் பணி நடக்கிறது. பத்தனம்திட்டா பகுதியிலும் மழைக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

மேலும் இராணுவ ஹெலி காப்டர்களும் மோசமான வானிலை காரணமாக அந்த பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மழையால் வீடுகளை இழந்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுபோல வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் வசித்தவர்களும் கடற்படை மற்றும் நீச்சல் வீரர்களால் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதையடுத்து கோட்டயம், பத்தனம்திட்டா, திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
SHARE