Thursday 14 October 2021

பாடசாலைகளுக்கு சமுகமளிக்கப் போவதில்லை - வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் - இலங்கை ஆசிரியர் சங்கம்..!!!

SHARE

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு 21 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு வழங்கப்படாவிட்டால் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ள இலங்கை அதிபர்கள் சங்கம், போராட்டத்திற்கான வெற்றியைப் பெறாமல் அதனைக் கைவிட நாம் தயாராக இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சீ.என்.லியனகே தெரிவிக்கையில் , அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு சாதகமானதொரு தீர்வு வழங்கப்படும் வரை அதிபர்கள் எவரும் பாடசாலைக்கு சமூகமளிக்கப் போவதில்லை.

பிரதேச அரசியல்வாதிகளால் எமது போராட்டத்தை வெவ்வேறு வழிகளில் சீர்குழைக்க முயற்சிக்கப்படுகிறது.

அந்த முயற்சிகளை தோற்கடிக்கும் வகையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்களில் நாம் கலந்துகொள்ளவில்லை.

எந்த சந்தர்ப்பத்திலும் போராட்டத்திற்கான வெற்றியைப் பெறாமல் அதனைக் கைவிட நாம் தயாராக இல்லை என்றார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில்,

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு யோசனைகளின் அடிப்படையில் மூன்றில் ஒரு பங்கினை எதிர்வரும் ஜனவரியில் வழங்குவதாகக் கூறுகின்றனர்.

அவ்வாறு வழங்கப்பட்டால் ஆசிரியர் சேவையின் 3(1) ஆம் தர ஆசிரியர்களுக்கு வெறும் 1250 ரூபா அதிகரிப்பு மாத்திரமே கிடைக்கப் பெறும். இவ்வாறு 1250 ரூபாவிற்காகவா நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம்?

பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் அதனுடன் தொடர்புடைய செலவுகள் முழுமையாகக் குறைவடைந்துள்ளன. இதன் மூலம் பாரிய நிதி எஞ்சியுள்ளது.

120 இலட்சம் ரூபா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிபர் - ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு மாத்திரம் அரசாங்கத்திடம் நிதி இல்லை என்று கூறப்படுகிறது.

சுபோதினி குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையே நாம் முன்வைத்தோம். அதற்கு 71 பில்லியன் தேவையாகும்.

எனவே 30 பில்லியனுக்கான அமைச்சரவை உப யோசனையை சுபோதினி குழு அறிக்கையின் ஒரு பகுதியாக நடைமுறைப்படுத்துமாறும் தெரிவித்துள்ளோம்.

21 ஆம் திகதிக்கு முன்னர் எமக்கான தீர்வு வழங்கப்படாவிட்டால் பாடசாலைகளுக்கு செல்வது தொடர்பில் மாற்று தீர்மானத்தை அறிவிப்போம் என்றார்.
SHARE