Sunday 17 April 2022

தென்ஆபிரிக்காவில் கடும் மழை ; 395 பேர் உயிரிழப்பு..!!!(Video)

SHARE

தென்ஆபிரிக்காவில் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 395 ஆக உயர்வடைந்துள்ளது.

தென்ஆபிரிக்காவில் குவாஜுலு - நேட்டல் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமையில் இருந்து கடும்மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடும்மழையால் வீதிகள், வீடுகள், பாடசாலைகள், மின் கம்பங்கள் மற்றும் பல அரசு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.


இதுபற்றி மாகாண நிர்வாக ஒத்துழைப்பு மற்றும் கலாசார விவகார செயல் குழு உறுப்பினர் சிபோ லோமுகா கூறும்போது, வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளுக்கு உதவியாக செயல்பட மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க 4 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று வீதிகள், குடிநீர் வினியோகம், சுகாதாரம் மற்றும் மின்வசதி உள்ளிட்ட பாதிப்படைந்த உட்கட்டமைப்பு வசதிகளை சீர்செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என கூறியுள்ளார்.

எனினும், வருகிற நாட்களில் மாகாணத்தின் சில பகுதிகளில் கூடுதலான மழை பெய்ய கூடும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதுபற்றி லோமுகா கூறும்போது, கடற்கரை பகுதியில் இருந்து பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய அளவுக்கு காற்று வேகமுடன் வீச கூடும் என்றும் தொடர்ந்து, பரவலாக பல பகுதிகளில் கடும்மழையும் பெய்ய கூடும் என்று தெரிவித்துள்ளார்.



SHARE