இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மற்றும் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை அமைதியின்மை ஏற்பட்டதைத் தொடர்ந்து நாளை (12) காலை 07 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் இராணுவத்தினரும் களமிறக்கப்பட்ட போதிலும் பல பகுதிகளில் அவ்வப்போது வன்முறைச் சம்பவங்களும் பதற்றமான சூழ்நிலைகளும் பதிவாகி வருகின்றன.
இதையடுத்து இலங்கை ஏற்கனவே எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தற்போது எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் கொழும்பில் அமைதியான முறையில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.