Saturday 7 May 2022

பரோட்டா பார்சலில் பாம்பு தோல்..!!!

SHARE



கேரளாவின் திருவனந்தபுரம் அருகே நெடுமங்காட்டு எனும் பகுதியில் ஷாலிமார் என்ற ஹோட்டல் உள்ளது. அந்த ஹோட்டலில் செல்லங்கோடு என்ற பகுதியில் வசிக்கும் பிரியா என்பவர் பரோட்டா உணவை பார்சல் வாங்கி சென்றுள்ளார். பிரியாவின் மகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் நிலையில், இருவருக்கு அந்த ஹோட்டலில் பரோட்டா வாங்கிச் சென்றுள்ளனர். பிரியாவின் மகள் ஒரு பரோட்டா சாப்பிட்ட நிலையில், தானும் சாப்பிடலாம் என பிரியா பார்சிலில் இருந்து பரோட்டாவை எடுத்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

முதல் வாய் பரோட்டாவை உண்ணத் தொடங்கியதும், அந்த பரோட்டாவுக்குள் பாம்பின் தோல் இருந்ததை பார்த்து பதறிப்போய் உள்ளார். உடனடியாக உண்ட உணவை வாந்தி எடுத்த பிரியா, அருகே உள்ள பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு அளித்துள்ளார். பொலிஸார் அவரை நகராட்சியில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு சென்று முறைப்பாடு அளிக்க கூறியுள்ளனர். இதை தொடர்ந்து பிரியா அளித்த முறைப்பாட்டின் பேரில், நெடுமங்காடு உணவு பாதுகாப்பு அலுவலர் அர்ஷிதா பஷீர் அந்த ஹோட்டலில் அதிரடியாக ஆய்வு நடத்தியுள்ளார்.

இந்த ஆய்வுக்குப் பின் பேட்டியளித்த அலுவலர் அர்ஷிதா, முதல் கட்ட விசாரணையில் இந்த பாம்பின் தோலானது பார்சல் கட்டப்பட்ட செய்திதாளில் இருந்துள்ளது. பார்சல் கட்டியப் பின் அது எப்படியே பரோட்டாவுக்கு வந்து சேர்ந்துள்ளது. அந்த பாம்பின் தோல் அரை விரல் நீளமாகும். அந்த உணவு லேப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்தப் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அந்த ஹோட்டலை ஆய்வு செய்த போது, அதன் சமையல் அறையில் போதிய வெளிச்சம் இல்லை. உரிய சுகாதாரம் இல்லை. கழிவுகள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை. எனவே, ஹோட்டலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, உடனடியாக மூடப்பட்டுள்ளது என்றார்.

சில நாள்களுக்கு முன்னர், கேரளாவில் கெட்டுப்போன ஷவர்மா சாப்பிட்டதால் மாணவி ஒருவர் உயிரிழந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து பல்வேறு ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இந்த பாம்பு தோல் விவகாரம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
SHARE