வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு குமார் சங்ககார விடுத்த அழைப்பு..!!!
வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா துறைக்கு புத்துயிர் அளிப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வருமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார அழைப்பு விடுத்துள்ளார்.
முகநூல் பதிவொன்றை வெளியிட்டுள்ள குமார் சங்கக்கார இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என அனைவருக்கும் நினைவூட்டியுள்ளார்.
இலங்கையின் நிலப்பரப்பு படங்களை அவர் தமது முகநூல் பதிவில் பகிர்ந்துள்ளதோடு அவற்றை மக்கள் தமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறும் கோரியுள்ளார். இலங்கையில் வீழ்ச்சி கண்டுள்ள சுற்றுலா துறையை மீட்டெடுக்க உலகிலுள்ள அனைத்து நண்பர்களும் ஆதரவளிக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இலங்கையர்களுக்கு மிகவும் கடினமான ஆண்டாக அமைந்திருந்தாலும் மக்களின் போராட்டங்களால் சில சாதகமான மாற்றங்கள் நாட்டில் ஏற்பட்டிருப்பதாகவும் சில நாடுகள் இலங்கை மீது விதித்திருந்த பயண தடையை நீக்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் தயங்காமல் தங்கள் விடுமுறைக்கான விமான பயண சீட்டுகளை பதிவு செய்யலாம் எனவும் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார் .