வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக் கிளை தலைவருமான சுகிர்தன் வீட்டிற்குள் தீ மூட்டி இளம் குடும்பப் பெண் கடந்த .16.04.2023 அன்று உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் நம்பிக்கையற்ற முறையில் தீர்ப்பு வழங்கப்பட்டு குற்றவாளி விடுதலை செய்யப்பட்டுள்ளமை நீதிக்கு புறம்பானது.
எனவே எமது மகளின் மரணம் தொடர்பில் சந்தேகமாக உள்ளது. நீதியான விசாரணை மூலம் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். என விஜிதாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
யாழ். குப்பிளான் பகுதியை சேர்ந்த விஜிதா (வயது 36) என்ற குடும்பப் பெண் யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மல்லாகம் உப அலுவலகத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.
உயிரிழந்த விஜிதாவின் வீட்டிலேயே தவிசாளர் சுகிர்தன் உணவருந்தி வருவதுடன் அந்த பெண்ணின் பிள்ளையை (வயது 10) வெளியிடங்களிற்கும் கல்வி நடவடிக்கைக்கும் அழைத்து செல்வதாகவும்
கூறப்படுகின்றது. மேலும், கடந்த
16ஆம் திகதி தன்னுடைய மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோலை எடுத்து கொண்டு தனது தோழி ஒருவர் பெற்றோல் இன்றி வீதியில் இடைநடுவில் நிற்பதாகவும், அவருக்கு பெற்றோலை வழங்கி விட்டு வருவதாகவும் கூறியே விஜிதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்
அவர் இரவு 1 மணிவரை வீடு திரும்பவில்லை. பலமுறை தொலைபேசி அழைப்பை எடுத்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் இரவு 1.30 மணியளவில் பொலீஸ் உத்தியோகத்தரான சுகிர்தனின் மகனும் மற்றுமொரு நபரும் வீட்டிற்கு வந்து
" மகள் தீ மூட்டிகொண்ட நிலையில் உயிருடன் அவரை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளோம் " எனக் கூறிச் சென்றனர்.
அதனை தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் மகளை வைத்தியசாலையில் பார்க்கச் சென்றோம். என விஜிதாவின் தந்தை தெரிவித்துள்ளார். மேலும்.
மகள் 10 மணிக்கு வீட்டில் இருந்து துவிச்சக்கரவண்டியில் சென்றவள். 3 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து 10.30க்கு அங்கு சென்றிருப்பாள். அதற்கு பிறகு அவள் தீமுட்டி கொண்டுள்ளாள். ஆனால் எங்களுக்கு அவர் எதுவும் சொல்லவில்லை. எங்களுடைய தொலைபேசி இலக்கம்சுகிர்தனிடம் உள்ளது.
அதோடு அவள் தன்னுடன் எதுவும் கதைக்காமல் இப்படி செய்து விட்டாள் என சுகிர்தன் கூறினார். ஆனால் அவள் அப்படி செய்திருக்க மாட்டாள் எனன் கூறும் விஜிதாவின் தாயார் எனது மகளின் மரணம் சந்தேகமாக உள்ளது
எமக்கு உண்மையான விசாரணை மூலம் நீதி கிடைக்கவேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், விஜிதா தற்கொலை செய்தாரா அல்லது குற்றச்செயல்கள் நடந்ததா என்பது உறுதியாகாத நிலையில் தவிசாளர் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த விடுவிப்பு அரசியல் பின்னணியுடன் உள்ளதே தவிர ஒரு பெண் பிள்ளையின் வாழ்க்கையை சீர் குலைத்துள்ளது குறித்து பதவியில் இருப்பவர்களும் நீதியாளர்களும் கருத்திற் கொள்ளவில்லை என பலரும் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது