முல்லைத்தீவு - மல்லாவி, வவுனிக்குளத்தில் நீரில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த குளத்திற்கு நீராடச் சென்ற இரண்டு சகோதரர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இருவரும் யாழ்ப்பாண நகரில் இருந்து மரண வீட்டில் கலந்துகொள்ள முல்லைத்தீவு வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குளத்தின் பிரதான வாய்க்கால் பகுதிக்குள் இளைய சகோதரர் நீராடிக் கொண்டிருந்தபோது, அவர் நீரில் தத்தளிப்பதைக் கண்டு மூத்த சகோதரர் அவரைக் காப்பாற்ற முற்படும் போதே இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவத்தில் யாழ்.நல்லூர் யமுனா வீதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சுரேஸ் (வயது-16), ரவிச்சந்திரன் சுமன் (வயது-27) ஆகிய இரு சகோதரருமே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.