யாழ். போதனா வைத்தியசாலை தரப்பின் அசமந்த போக்கு - உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கில் குழப்பம்..!!!


யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பின் மீண்டும் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காரைநகர் - கருங்காலி பகுதியில் வசித்து வந்த சின்னையா (வயது 71) என்பவரது சடலமே நேற்றையதினம் (22) மீண்டும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்கில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

போதனா வைத்தியசாலையில் தினமும் பல முறைகேடுகள் இடம்பெற்று வரும் நிலையில் வைத்தியசாலை நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த (26.03.2024) அன்று சங்கானைப் பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட வேளை மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானார்.

இந்நிலையில் சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதனையடுத்து சிகிச்சை பலனின்றி நேற்று (22) அதிகாலை 2.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

விபத்தில் ஏற்பட்ட மரணம் என்ற காரணத்தினால் விசாரணைகளை மேற்கொள்வதற்கு மானிப்பாய் பொலிஸார் வைத்தியசாலைக்கு சென்றவேளை அங்கு சடலம் இல்லை.

இந்நிலையில், மீண்டும் சடலத்தை வைத்தியசாலைக்கு எடுத்து வந்து உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னரே உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வைத்தியசாலை தரப்பின் அசமந்தமான இச்சம்பவத்தினால் இறுதிச் சடங்குகளில் தடை ஏற்பட்டதுடன் வீண் அலைச்சலும் செலவுகளும் ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தினமும் இவ்வாறான முறைகேடுகள் இடம்பெற்று வரும் நிலையில் வைத்தியசாலை நிர்வாகம் தூக்கத்தில் இருக்கின்றதா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here