பாடசாலை கால அட்டவணை பற்றி கல்வி அமைச்சு அறிவித்தல்..!!!



2025ஆம் ஆண்டில் உரிய நாட்களின் எண்ணிக்கை அடிப்படையில் பாடசாலைகளை நடத்துவதற்கான இயலுமை காணப்படவில்லையென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டில் காணப்படும் அரச விடுமுறைகள் மற்றும் பாடசாலை ஆண்டு விடுமுறையின் பின் ஜனவரி 27ஆம் திகதி ஆரம்பிக்கப்படுகின்றமை ஆகிய காரணிகளால் அவ்வாறு உரிய நாட்களின் எண்ணிக்கை அடிப்படையில் பாடசாலைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பாடசாலை கால அட்டவணை தொடர்பில் 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வௌியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய ஆண்டொன்றிற்கு 210 நாட்கள் பாடசாலைகள் நடத்தப்பட வேண்டும்.

எவ்வாறாயினும், அடுத்த ஆண்டில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளிலும் 181 நாட்கள் மாத்திரமே கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான இயலுமை காணப்படுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் ஜனவரி 27ஆம் திகதி முதல் ஏப்ரல் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதனிடையே, 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பொது விடுமுறை ஞாயிறு மற்றும் பருவகால விடுமுறை தினங்களில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் எனவும் விசேட காரணங்களுக்காக ஏதேனும் ஒருநாளில் பாடசாலைகள் மூடப்படுமாயின் அந்த நாட்களுக்காக மாற்று தினங்களில் பாடசாலைகள் இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here