அங்கீகரிக்கப்படாத உபகரணங்கள் மற்றும் வாகன மாற்றங்களை அகற்றும் திட்டம் ஜூலை 1 ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பிற்கான பொலிஸ் பிரதி மா அதிபர் (DIG) இந்திக்க ஹபுகொட, இந்த மாற்றங்களில் அதிக ஒளிரும் விளக்குகள், ஒலிபெருக்கிகள் மற்றும் உலோகக் கம்பங்கள் அடங்கும் என்று கூறினார்.
வாகனங்களில் இவ்வாறான மாற்றங்கள் பெரும்பாலும் விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு கடுமையான தீங்கு விளைவிப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
"2024 இல் வீதி விபத்துக்களில் 815 பாதசாரிகள் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு 18-28 வயதுக்குட்பட்ட சுமார் 800 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள் உயிரிழந்ததாகப் பதிவாகியுள்ளது. 2024 இல், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் வீதிகளில் இயக்கத் தகுதியற்ற 8788 வாகனங்களை அடையாளம் கண்டது," என்று அவர் கூறினார்.
வீதிகளில் தகுதியற்ற வாகனங்கள் பயணிப்பதன் காரணமாகவும் விபத்துகள் ஏற்படுவதாக பொலிஸ் பிரதி மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்தார்.
"ஆகவே, என்ன பிரச்சினைகள் மற்றும் ஆட்சேபனைகள் செய்யப்பட்டாலும், வாகனங்களில் உள்ள இந்த அங்கீகரிக்கப்படாத மாற்றங்கள் அகற்றப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.