
வரவிருக்கும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படவுள்ளதால், மாணவர்களின் போக்குவரத்துக்குத் தேவையான மாற்றங்கள் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து தொடர்பாக ஏற்கனவே சம்பந்தப்பட்ட தரப்பினருடன் முதற்கட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மற்றொரு சுற்று கலந்துரையாடல் நடைபெறும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நலகா கலுவேவா குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் “இது குறித்த தேவையான தகவல்களை நாங்கள் ஏற்கனவே வழங்கியுள்ளோம். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சு தற்போது நிலைமையை மீளாய்வு செய்து வருகின்றது. புதிய பாடசாலை அட்டவணை அமுலுக்கு வந்தவுடன் போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பான தேவைகளை நாங்கள் தெரிவிப்போம். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி அதற்கேற்ப பதிலளிக்கும்." எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வருமென எதிர்பார்க்கப்படும் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தரம் 1 முதல் 6 ஆம் வகுப்பு வரையிலான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.