12 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கைபேசி தடை செய்யும் விவகாரம் தொடர்பில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தன்னிலை விளக்கமளித்துள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து அரசாங்கத்திற்குள் இதுவரை உத்தியோகபூர்வ கலந்துரையாடல் எதுவும் நடைபெறவில்லை என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர் குறிப்பிடத்தக்க கலந்துரையாடல் தேவைப்படும்.
நாங்கள் இன்னும் எதையும் விவாதிக்கவில்லை. இது ஒரு கருத்து மட்டுமே. இதைச் செய்ய வேண்டுமானால், நீதி அமைச்சு போன்ற பிற அமைச்சுக்களுடன் கலந்தாலோசித்து செய்யப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சில நாடுகள் ஏற்கனவே இத்தகைய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் 12 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் கைபேசி பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக முன்மொழியப்பட்ட யோசனைகள் தற்போது ஆலோசனை மட்டத்திலேயே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருப்பதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடுக்கும் ஒரு தடையை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news
