வழிபாட்டுத் தலங்கள் ஒலி எழுப்பும் சாதனங்கள் பாவிப்பது தொடர்பில் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்..!!!



மக்களுக்கான ஆன்மீக பலத்தை வழங்குகின்ற வழிபாட்டுத் தலங்கள் ஒலி எழுப்பும் சாதனங்கள் பாவிப்பது தொடர்பில் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு ஒத்துழைப்பு நல்குமாறு யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம.பிரதீபன் அறிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த செய்தி குறிப்பில் ,

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் ஒலி எழுப்பும் சாதனங்களின் ஊடான அதீத ஒலி எழுப்பல் செயற்பாட்டினால் பாடசாலை மாணவர்கள் மற்றும் கல்வி நடவடிக்கையினை மேற்கொள்வோர் கற்றல் செயற்பாடுகளில் பாரிய இடர்பாடுகளை எதிர்கொள்கின்றார்கள்.

மேலும் யாழ்ப்பாண மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்கிக்கொண்டிருக்கும் இந்நிலையில் இச் செயற்பாடானது புலமைப்பரிசில், க.பொ.த சாதாரணம், க.பொ.த உயர்தரம் கற்றல் காலங்களில் மட்டுமல்லாது பரீட்சை காலங்களிலும் கல்வி கற்போரின் கற்றல் செயற்பாட்டில் பாரிய இடர்பாடுகளை ஏற்படுத்துவதனால், எதிர்கால சந்ததியினரின் கல்வி நடவடிக்கையானது முழுமையாக பாதிக்கும் சூழல் காணப்படுகின்றது.

அத்துடன் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள சூழலில் வசிக்கும் முதியோர் மற்றும் நோய்வாய்ப்பட்டோர் அதீத ஒலி எழுப்பும் செயற்பாட்டினால் உடல் உள ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை எதிர்கொள்கின்றனர் என்பதுடன் பிரதான வீதியோரங்களில் காணப்படுகின்ற வழிபாட்டுத் தலங்களில் ஒலி எழுப்பும் சாதனங்களின் அதீத சத்தத்தினால் வீதியில் விபத்துக்களும் ஏற்படக்கூடிய ஏதுநிலை காணப்படுகின்றது.

மக்களுக்கான ஆரோக்கியமான சமூக சூழலை கட்டியெழுப்பும் நடவடிக்கையின் கீழ், ஒலி எழுப்பும் சாதனங்கள் மூலம் அதீத ஒலி எழுப்பப்படுவதால் ஏற்படும் பாதக விளைவுகள் தொடர்பில் சமூகத்திற்கு / மக்களுக்கு ஆலோசனை வழங்கி அவர்களை வழிநடத்தும் தார்மீக பொறுப்பு வழிபாட்டுத் தலங்களையே பெருமளவில் சார்ந்திருக்கின்றது.

எனினும் சில வழிபாட்டுத் தலங்களின், ஒலி எழுப்பும் சாதனங்களின் ஊடாக அதீத ஒலியை எழுப்பும் செயற்பாடானது மக்கள் மத்தியில் பலத்த விசனத்தை ஏற்படுத்திவருகின்றது.

இவ்விடயத்திற்காக சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்றமை ஆன்மீகத்தை போதிக்கின்ற வழிபாட்டுத் தலங்களிற்கு பொருத்தமற்ற செயற்பாடாக இருப்பதனால் மனிதாபிமான ரீதியாக செயற்படுவதே அனைத்து வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தினது தலையாய கடமையாகும். அவ்வாறு செயற்படாதபோது சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுவதும் தவிர்க்க முடியாததாகி விடுகின்றது என அந்த செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here