இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையும், அம்பலாங்கொட சாலையும் இணைந்து காங்கேசன்துறை – மகரகம வைத்தியசாலை ஊடாக காலி வரையான புதிய பேருந்து சேவையை இன்றையதினம் ஆரம்பித்துள்ளது.
இந்தப் பேருந்து சேவை இன்று திங்கட்கிழமை இரவு 7.15 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
மகரகம வைத்தியசாலைக்கு செல்வோரின் தேவை கருதியே பிரதானமாக இந்த புதிய பேருந்து சேவை ஆரம்பிக்கப்படுகிறது.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் வடமாகாண பிரதான பிராந்திய முகாமையாளர் ஏ.ஆ.எப்.அமீன், வடமாகாண பிராந்திய முகாமையாளர் ஏ.ஜே.லம்பேர்ட், இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண பிராந்திய பாதுகாப்பு முகாமையாளர், பிராந்திய விநியோக முகாமையாளர், பிராந்திய தொழில்நுட்ப முகாமையாளர் மற்றும் கிளிநொச்சி சாலை முகாமையாளர், சாரதி காப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இரவு 7.15 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து ஆரம்பமாகிய இந்த பேருந்து சேவை இரவு 8.05 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்து பின்னர் 20.15 மணிக்கு புறப்பட்டு சாவகச்சேரி, கிளிநொச்சி, வவுனியா, அனுராதபுரம், கல்கமுவ ஊடாக மகரகம வைத்தியசாலையைச் சென்றடையும். அதே பாதை ஊடாக காலை 8.40 மணிக்கு காலியைச் சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அதேநாள் மாலை 4.30 மணிக்கு காலியில் இருந்து சேவையை ஆரம்பித்து மறுநாள் காலை 6.40 மணிக்கு யாழ்ப்பாணம் நகரை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.