விவசாயிகள் நலனில் அக்கறை கொள்ளாத விவசாய சம்மேளனம் : நவாலி விவசாய சம்மேளனம் மீது விசனம்..!!!


யாழ்ப்பாணம் நவாலிப் பகுதி விவசாயிகளின் தேவைகள் தொடர்பாக விவசாய அமைச்சரின் வருகையின் போது எந்தவிதமான கோரிக்கைகளையும் நவாலி விவசாய சம்மேளனம் முன்வைக்கவில்லை என அப் பகுதி விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அப் பகுதி விவசாயிகள் கூறுகையில்,

நவாலி மூன்று கிராம அலுவலர் பிரிவினை உள்ளடக்கிய பரந்த விவசாய பூமியாகும். மூன்று கிராம அலுவலர் பிரிவிலும் 423 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பதியப்பட்ட நிலையில் உறுப்பினர்களாக உள்ளனர்.

அண்மையில் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே விவசாயிகளின் தேவைகளையும், பிரச்சினைகளையும் முன்வைக்குமாறு யாழ் வருகைக்க முன்னரே கோரியிருந்தார்.

எனினும் நவாலி விவசாயிகள் சம்மேளனம் சார்பில் விவசாய அமைச்சரின் யாழ்.வருகையின் போது விவசாயிகளின் தேவை குறித்து எந்த முன்வரைபுகளும் முன்வைக்கப்படவில்லை.

யாழ். மாவட்டத்தில் ஏனைய சம்மேளனங்களின் தலைவர்  செயலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கருத்திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பெரும்பாக கமநல நிலையத்தினால் சொல்லப்படும் வேலைகளை முன்னெடுப்பதற்கு சம்மேளனங்கள் தேவையில்லை.

மாறாக விவசாயிகளின் தேவைகளை அறிந்து அத் தேவைகளை திட்டமிட்டு ஒழுங்கமைத்து மற்றும் உட்கட்டுமான கருத்திட்டங்களாக விடயங்களை செயற்படுவதற்கே சம்மேளனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களை விடயமறிந்த சம்மேளனங்கள் சமர்ப்பித்து வெற்றியடைந்துள்ளன.

ஆனால் நவாலி வடக்கு விவசாயிகள் சம்மேளனம் விவசாய உரமானிய பதிவுகளை கூட விவசாயிகளுக்கு முழுமையாக செய்யமுடியாத நிலையில் பதவிகளில் இருப்பது எம்மை மேலும் கஸ்டத்துக்குள்ளாக்கியுள்ளது என்றனர்.

Previous Post Next Post


Put your ad code here