யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது..!!!


யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் எனும் குற்றசாட்டில் மூவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்.நகர் பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளரான எஸ். முகுந்தன் என்பவர் மீது நேற்றைய தினம் புதன்கிழமை, வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி, அவரது கையடக்க தொலைபேசியும் பறித்து சென்றது. 

கொரோனோ தொற்று நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார விதிமுறைகளை பேணாது தமிழ்க் கொடி எனும் அமைப்பு உதவி வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி , அது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது முகநூலில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு பதிவொன்றினை இட்டிருந்தார். 

பதிவினை நீக்க கோரி தமிழ்க் கொடி எனும் அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் அழுத்தத்தை கொடுத்ததுடன் மிரட்டலும் விடுத்திருந்தனர். அதற்கு ஊடகவியலாளர் சம்மதிக்காத நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று அவர் மீது தாக்குதல் நடாத்தியதுடன் , அவரது கையடக்க தொலைபேசியையும் பறித்து சென்றுள்ளனர். 

தாக்குதல் சம்பவம் குறித்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளரால் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் , தாக்குதல் மேற்கொண்டனர் எனும் குற்றச்சாட்டில் விமல் , கிஷோகுமார் மற்றும் ஜீவமயூரன் ஆகிய மூவரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட மூவரிடமும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post Next Post


Put your ad code here