யாழுக்கு வழங்கப்பட்ட 50ஆயிரம் தடுப்பூசிகளும் முடிவடைந்து விட்டன..!!!


யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவடைந்ததாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அடுத்த கட்ட தடுப்பூசிகள் வார இறுதியில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது எனவும், ஏற்கெனவே தடுப்பூசி வழங்க தயாராக இருந்த கிராம சேவகர் பிரிவுகளில் நாளைய தினம் தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது எனவும் க.மகேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த விடயம் தொடர்பில் பொது மக்கள் குழப்பமடைய தேவையில்லை எனவும் எதிர்வரும் வாரமளவில் யாழ் மாவட்டத்திற்கு அரசினால் அடுத்த கட்ட தடுப்பூசி வழங்கப்படும் போது ஏற்கனவே சுகாதாரப் பிரிவினர் தடுப்பூசி வழங்கல் தொடர்பில் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் படி தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என க.மகேசன் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக  நேற்று மாலையுடன் 32 ஆயிரம் தடுப்பூசிகள் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் மிகுதி தடுப்பூசியும் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள க.மகேசன் இன்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக பணியாளர்கள் மற்றும்  15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என எதிர்பார்த்து இருந்த போதிலும் கூடுதலான மக்கள் ஆர்வம் காட்டி தடுப்பூசியை பெற்றதன் காரணமாக இன்று மதியத்துடன் குறித்த தடுப்பூசிகள் அனைத்தும் நிறைவடைந்து உள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post


Put your ad code here