கிளிநொச்சி, பாரதிபுரம் கிராமத்தில் உள்ள முன்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பால் பக்கற் ஒவ்வாமையால் 13 மாணவர்கள் வாந்தி மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்று (4) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்பள்ளி மாணவர்களுக்கான போசாக்கு திட்டத்தின் கீழ், நிறுவனமொன்று பொதியிடப்பட்ட பால் பக்கற்றுகளை வழங்கியிருந்தனர்.
அந்த பாலினை அருந்திய பின்னரே மாணவர்களுக்கு வாந்தியும் வயிற்றோட்டமும் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, உடனடியாக மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு பல வைத்தியர்கள் ஒன்றிணைந்து உடனடியாக மாணவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து மாணவர்கள் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பால் பக்கற்றின் மாதிரிகள் கொழும்பில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.