Thursday 28 March 2024

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!!

SHARE


கொவிட் 19 தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு இதயம் மட்டுமன்றி மூளையும் பாதிக்கும் அபாயம் இருப்பதாக புதிதாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வு தெரியவந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களில் கணிசமானோர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா மட்டுமன்றி அதற்கு எதிராக மனிதர்கள் எடுத்துக்கொண்ட தடுப்பூசியும் இந்த மாரடைப்பு காரணமென முறைப்பாடுகள் எழுந்தன.

இருப்பினும் கொரோனா பாதிப்பே அதன் பக்கவிளைவுகள் பலவற்றை விட்டுச்செல்வது உறுதியாகி உள்ளது.

கொரோனா பின்னணியிலான மருத்துவ ஆய்வுகளின் இன்னொரு திசையில், அந்த பாதிப்புகளில் மற்றொன்று மூளையை மையம் கொண்டிருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல் பாதிப்புகளில் தொடங்கி மூளை சுருக்கம் வரை அந்த பாதிப்பு நீடிக்கக்கூடும் எனவும் தெரியவந்துள்ளது.

’நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினி’ல் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு,

கொரோனாவுக்கு காரணமான வைரஸ் பல வழிகளில் மூளை ஆரோக்கியத்தை ஆழமாக பாதிக்கிறது என்று தெரிவிக்கிறது.

தொற்றுநோயின் ஆரம்ப நாட்களிலிருந்தே, ’மூளை மூடுபனி’ என்பது பலர் அனுபவிக்கும் குறிப்பிடத்தக்க சுகாதார நிலையாக அறியப்பட்டது.

ஆனால், அதற்கு இப்போது மருத்துவ அறிவியலாளர்கள் ஏராளமான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர்.

கொரோனா வைரஸின் லேசான மற்றும் மிதமான பாதிப்புக்கு ஆளானவர்களின் மூளை ஆரோக்கியத்தை ஆய்வு செய்தபோது மூளையின் நீடித்த வீக்கம் மற்றும் 7 ஆண்டுகள் வரையிலான முதுமை நிலை வரை பல மாற்றங்களைக் கண்டறிந்தனர்.

இவை, மூளை மற்றும் அதன் செயல்பாட்டில் கொரோனா பாதிப்பு விட்டுச்செல்லும் ’வடு’ என்று மருத்துவ ஆய்வாளர்கள் விவரிக்கின்றனர்.

இது நடைமுறையில் சாதாரண நினைவாற்றல் பிரச்சினை முதல் நீடித்த அறிவாற்றல் குறைபாடுகள் வரை, கொரோனா பாதிப்பில் மீண்டவரை அச்சுறுத்துகின்றன.

கொரோனா பாதிப்புக்கு ஆளாவதற்கு முன்னும் பின்னுமாக எடுக்கப்பட்ட ’இமேஜிங்’ அடிப்படையிலான ஆய்வுகளும் இதனை உறுதி செய்துள்ளன.

உச்ச பாதிப்பாக ’மூளை சுருக்கம்’ வர வாய்ப்பாகிறது. மிதமான மற்றும் லேசான பாதிப்புகளுக்கு அப்பால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐசியூ அனுமதி வரை தீவிர பாதிப்பு கண்டவர்களின் மூளை, 20 ஆண்டுகள் வயதானதன் பாதிப்புக்கும் ஆளாகக்கூடும்.

மேலும் அந்த வயதுக்கான அறிவாற்றலில் குறைபாடுகள் உட்பட அரிதான வேறு சில மூளை பாதிப்புகளையும் உருவாக்கக்கூடும்.

இந்த மூளை பாதிப்புகளே, 60 வயதைக் கடந்தவர்கள் மத்தியில் நினைவாற்றல் இழப்புகளின் தீவிரத்தன்மையான ’டிமென்ஷியா’ பாதிப்பு வரை கொண்டு செல்கிறது.

கொரோனா பாதிப்பு கண்டு இறந்தவர்களின் மூளைகளை ஆய்வு செய்ததில், கொரோனா எவ்வாறு மூளையில் பேரழிவுக்கான சேதத்தை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதை மருத்துவ ஆய்வாளர்களுக்கு உணர்த்தி உள்ளன.

எனவே கொரோனா பாதிப்பு கண்டு குணமடைந்தவர்கள் இனி இதயம் மட்டுமன்றி மூளை ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது நல்லது.
SHARE