தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (Fuel QR) நடைமுறையின் கீழ், புதிய வாகனங்கள் மற்றும் உரிமையாளர் மாற்றம் செய்யப்பட்ட வாகனங்களைப் பதிவு செய்வதில் நிலவிய தடைகள் நீக்கப்பட்டு, தற்போது அந்த வசதிகள் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
புதிய வாகன உரிமையாளர்கள், இதுவரை பதிவு செய்யாதவர்கள் அல்லது வாகன உரிமையாளர் மாற்றம் செய்தவர்கள், உத்தியோகபூர்வ தகவல்களுக்கு https://fuelpass.gov.lk இணையத்தளத்தை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தளத்திலுள்ள 'Vehicle Registration' என்ற பகுதியைத் தெரிவு செய்து, கேட்கப்பட்டுள்ள வாகன விபரங்கள் மற்றும் தொலைபேசி இலக்கத்தை உள்ளீடு செய்து உங்களுக்கான புதிய QR குறியீட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்று, அதே வாகனம் மற்றும் தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்துபவர்கள் எவ்விதத் தடையுமின்றி தமது குறியீட்டைப் புதுப்பித்து வந்தனர்.
இருப்பினும், புதிய பதிவுகளை மேற்கொள்பவர்கள் எதிர்கொண்ட தொழில்நுட்பக் கோளாறுகள் தற்போது முழுமையாகச் சரிசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாய நடவடிக்கைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் நிலவும் விசேட பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இதற்கான தீர்வுகள் மற்றும் மேலதிக வழிகாட்டல்கள் இன்று (15) பிற்பகல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.
