நாட்டில் நிலவும் எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வாக, அரச துறையின் குறிப்பிட்ட சில ஊழியர்களை மீண்டும் வீட்டிலிருந்தே பணியாற்றும் (Work From Home) நடைமுறைக்கு உட்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றது.
இது தொடர்பாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சுமன ஆலோக்க பண்டாரவிடம் வினவியபோது, பல்வேறு தரப்பினரிடமிருந்தும் இது குறித்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.
எரிசக்தி நெருக்கடி ஏற்படும் காலங்களில் உலகின் பல நாடுகளும் இத்தகைய வேலைத்திட்டங்களைச் செயல்படுத்துவது வழமையாகும். இலங்கையிலும் கடந்த கொரோனா தொற்றுக் காலத்தில் வீட்டிலிருந்தே பணியாற்றும் முறை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக உலகளவில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அண்மையில் இலங்கையில் எரிபொருள் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டன.
எரிபொருள் விநியோகத்தில் தொடர்ந்தும் தடைகள் ஏற்படும் பட்சத்தில், விலைகளை மீண்டும் அதிகரிக்க வேண்டிய சூழல் உருவாகலாம் எனத் தாது எண்ணெய் கூட்டுத்தாபன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எரிசக்தி நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதற்கான மற்றொரு கட்டமாக, எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு மீண்டும் "QR" குறியீட்டு முறையை (QR Code system) அறிமுகப்படுத்துவது குறித்தும் அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
