யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் அமைந்துள்ள வட இலங்கை சங்கீத சபைக்கு முன்பக்கமாக உள்ள வீதிக்கு, புகழ்பெற்ற வயலின் வித்துவான் லட்சுமி நாராயணாவின் பெயர் சூட்டப்பட்டு, அதற்கான பெயர்பலகை இன்றைய தினம் வியாழக்கிழமை திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும், இந்தியாவில் இருந்து வருகை தந்த பிரபல வயலின் வித்துவான் டாக்டர் எல். சுப்ரமணியம் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டு பெயர்பலகையை திரைநீக்கம் செய்து வைத்தனர்.
இந்நிகழ்வில் இசை மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த பலரும், கலாசார ஆர்வலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். இசைத்துறைக்கு வயலின் வித்துவான் லட்சுமி நாராயணா ஆற்றிய சிறப்பான பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இந்த வீதிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்
