Sunday 18 October 2020

மன்னாரில் 2 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மீட்பு..!!!

SHARE


மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியை அண்டிய காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை மன்னார் பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மீட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்ட நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட கேரள கஞ்சா 200 கிலோ 825 கிராம் எடை கொண்டது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடற்படையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாகவும், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஸாந்தனின் வழி நடத்திலின் கீழ் மன்னார் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.டி.வீரசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் இன்று காலை 4.30 மணியளவில் ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியை அண்டிய காட்டுப்பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின்போது 94 பொதிகளில் பொதி செய்யப்பட்ட 200 கிலோ825 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.

குறித்த கேரள கஞ்சா பொதிகள் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியானது என தெரிய வந்துள்ளது. சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE