Sunday 12 September 2021

காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடியலைந்த தந்தை உயிரிழப்பு..!!!

SHARE

இறுதி யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடியலைந்த தந்தை ஒருவர், உயிரிழந்துள்ளார்.

வவுனியா- மதியாமடு, புளியங்குளம் எனும் முகவரியில் வசித்து வந்த, காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனுக்கு, நீதி கேட்டுப் போராடிய செபமாலை இராசதுரை (பிறப்பு: 1948.12.04), தனது மகன் பற்றிய உண்மை நிலை ஏதும் அறியாமலேயே கடந்த வெள்ளிக்கிழமை(10) உயிரிழந்துள்ளார்.

கடந்த 2009.05.24 அன்று ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து, இராணுவத்தினர் இவரது மகனான இராசதுரை விஜி (பிறப்பு: 1987.05.07) என்பவரை கைது செய்து, குடும்பத்தினரிடமிருந்து தனியாக பிரித்து அழைத்துச் சென்றிருந்த நிலையில், கடந்த 12 வருடங்களாக மகன் பற்றிய நம்பகரமான தகவல் ஏதும் அறியாமலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் ஆயிரத்து 668 நாட்கள் கடந்தும் நடைபெற்று வரும் ‘காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கேட்கும் தொடர் போராட்டத்தில்’ தனது முதுமைக் காலத்திலும் செபமாலை இராசதுரை அவர்கள் நல்ல தேக ஆரோக்கியத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு, இதுவரைக் காலமும் போராடி வந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE