Saturday 26 March 2022

பீஸ்ட் வசூலுக்கு நெருக்கடியான கேஜிஎப்..!!!

SHARE

இந்திய திரையுலகம் எதிர்பார்த்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. தெலங்கானா, ஆந்திரா, இந்திப் பதிப்பு வெளியான வட மாநிலங்களில் படத்திற்கு பிரமாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. பாகுபலியில் கற்பனை புனைவில் உணர்வுகளை பிரமாண்டமாக திரையில் கொண்டு வந்து உலகம் முழுவதும் தெலுங்கு சினிமாவை உயர்த்திப் பிடித்தார் ராஜமெளலி. அதே நேரத்தில் அதுவரை இந்திய சினிமாவில் சாதனைகளாக இருந்த வசூல் கணக்குகளை பின்னுக்குத் தள்ளி 2000ம் கோடி ரூபாய் வசூல் செய்த படமாக பாகுபலி-2 இன்று வரை இருந்து வருகிறது.

சுதந்திரப் போராட்ட வரலாற்றில் நேரடியாக சந்திக்காத இரண்டு நாயகர்களின் கதாபாத்திரங்களை கற்பனை கலந்து விஷுவல் மேஜிக்காக ஆர்ஆர்ஆர் படத்தை திரையில் கொண்டு வந்திருக்கிறார் ராஜமெளலி. அவரது நோக்கம் நிறைவேற தெலுங்கு சினிமாவின் இரண்டு வசூல் கதாநாயகர்கள் தங்கள் நாயக பிம்பத்தை ஓரமாக வைத்துவிட்டு, இயக்குநரின் நடிகர்களாக மாறி உழைத்திருக்கிறார்கள். அதன் விளைவு மீண்டும் ராஜமெளலி சர்வதேச சினிமாவில் தெலுங்கு சினிமாவின் கொடியை ஆர் ஆர் ஆர் படத்தின் மூலம் உயர பறக்கவிட்டு தெலுங்கு சினிமாவை கெளரவப்படுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில் இந்திய சினிமாவில் அடுத்த பிரமாண்ட படைப்பாக கன்னட நாயகன் யாஷ் நடிப்பில் கேஜிஎப்-2 படத்தை வணிக வட்டாரம் எதிர்பார்க்க தொடங்கிவிட்டது. தமிழ் சினிமாவில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் படங்களுக்கு தமிழ்நாடு கடந்து அதிக வசூலை பெற்று தரும் மாநிலங்கள் கேரளம், கர்நாடக மாநிலங்கள்தான். ஆனால் பீஸ்ட் படத்திற்கு வழக்கம் போன்று தயாரிப்பாளருக்கு வருமானத்தையும், வசூலையும் மேற்கண்ட மாநிலங்களில் இருந்து கிடைக்காது என்கிற சூழல் ஏற்பட்டிருக்கிறது பீஸ்ட் படத்துக்கு. இப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு திரையரங்குகளில் இந்தப்படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

எஃப்.எம்.எஸ் எனப்படும் வெளிநாடுகளுக்கான விநியோக உரிமையை வழக்கம் போன்று கருணாமூர்த்தியின் ஐங்கரன் இண்டர்நேசனல் நிறுவனம் வாங்கியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தெலுங்கு தயாரிப்பாளரும், விஜய்யின் அடுத்த படத்தைத் தயாரிப்பவருமான தில்ராஜு வெளியிடவுள்ளார்.

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் கேரள மாநில உரிமை விற்பனையில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் விஜய் படம் வெளியாகிறது என்றால் 70% திரையரங்குகளில் அந்தப்படத்தை வெளியிடுவார்கள். இந்தமுறை அது மாறிவிட்டது. அதற்குக் காரணம் கேஜிஎஃப்- 2 படம்தான். பீஸ்ட் படம் உலகம் முழுக்க வெளியாகும் எல்லா இடங்களிலும் கேஜிஎஃப்- 2 படத்தின் தமிழ்ப்பதிப்பும் வெளியாகிறது. அப்படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏப்ரல் 14 அன்று வெளியாகவிருக்கும் கேஜிஎஃப் 2 படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை லிஸ்டின் என்பவர் பெற்றிருக்கிறார். அவர், கேரளாவில் உள்ள 80% திரையரங்குகளில் அப்படத்தை வெளியிட ஒப்பந்தம் ஏற்கனவே செய்துள்ளார்.

இந்தநிலையில், பீஸ்ட் படத்தின் கேரள உரிமை விலை பத்துகோடி ரூபாய் என நிர்ணயித்து சன் பிக்சர்ஸ் வியாபாரத்தை தொடங்கினார்கள். ஆனால் படத்தை வாங்க ஒருவரும் வாங்க முன்வரவில்லையாம். அதற்குக் காரணம், கேஜிஎஃப் 2 படம் திரையிட ஒப்பந்தம் செய்த திரையரங்குகள் போக எஞ்சியுள்ள 150க்கும் குறைவான திரையரங்குகளில்தான் பீஸ்ட் படத்தை வெளியிட்டாக வேண்டும். அப்படிச் செய்யும்போது சன் பிக்சர்ஸ் நிர்ணயித்துள்ள 10 கோடி ரூபாய் வசூல் நிச்சயம் வராது என்பதால் யாரும் முன்வரவில்லையாம்.

நிலைமையை உணர்ந்த சன்பிக்சர்ஸ் கேஜிஎஃப் -2 படத்தை வெளியிடும் லிஸ்டினிடமே பீஸ்ட் பட வெளியீட்டு உரிமையைக் கொடுத்துவிட்டார்கள். அவரிடம் கொடுத்தால்தான் கேஜிஎஃப் -2 க்கு இணையாக பீஸ்ட்டுக்கும் திரைகள் கிடைக்கும் என்கிற நிலை. அதனால் அவரிடம் கொடுத்திருக்கிறார்கள். அதன் விலை சுமார் ஆறு கோடி என கூறப்படுகிறது.

கேரளா மாநிலத்தில் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா,கர்நாடகா, இந்தி மற்றும் பன்னாட்டு விநியோக உரிமை ஆகியவற்றிலும் இதுபோன்ற நெருக்கடி உள்ளது என்கிறார்கள். இதனால் பீஸ்ட் படத்திற்கு சன் பிக்சர்ஸ் எதிர்பார்க்கும் வருவாயில் சுமார் 50 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படக்கூடிய சூழல் தற்போது நிலவுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே தனிக்காட்டு ராஜாவாக பீஸ்ட் இருக்க முடியும் என்பதே தற்போதைய நிலவரம்.
SHARE