Wednesday 8 June 2022

விக்ரம் வெற்றி : படக்குழுவுக்கு பரிசளித்த கமல்..!!!

SHARE

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்து கடந்த ஜூன் 3ல் திரைக்கு வந்த படம் ‛விக்ரம்'.

நான்கு ஆண்டுகளுக்கு பின் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவரும் படம் என்பதால் அதற்குரிய விளம்பர வேலைகள் கமல்ஹாசன் நேரடி பார்வையில் நடைபெற்றது, இந்தியாவில் பிரதானமாக பேசப்படும் ஐந்து மொழிகளில் படம் வெளியானதால் இந்தியா முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நடைபெற்ற படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கமல்ஹாசன் பங்கேற்றார். படத்தின் மீது அதிகபட்ச எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அதற்கு ஏற்றபடி படம் ஆக்சன் கதை என்பதால் ரசிகர்களை கவர்ந்தது முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் மொத்த வசூல் 150 கோடி ரூபாயை கடந்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின் கமல்ஹாசன் நடித்துள்ள படம் சூப்பர் ஹிட்டாகி இருப்பதால் கமல்ஹாசன்மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளரும் கமல் என்பதால் இந்த படம் மூலம் கிடைக்கும் வருவாய் - லாபம் அவருக்கு மட்டும் கிடைக்கும்.

இந்த மகிழ்ச்சியை படக்குழுவோடு இன்று கொண்டாடி உள்ளார் கமல்ஹாசன். படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் ரக சொகுசு காரை பரிசாக வழங்கி உள்ளார் கமல்ஹாசன். அதோடு இந்த படத்தில் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய 13 பேருக்கும் தலா டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 ரக மோட்டார் பைக்கை பரிசாக வழங்கி உள்ளார்.

இதனிடையே விக்ரம் படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது. தமிழ் தவிர்த்து பிற மொழிகளிலும் குறைவில்லாத வசூலை இப்படம் பெற்றுள்ளது. அதனால் அந்தந்த மொழியில் நன்றி தெரிவித்து, தனித்தனியாக வீடியோ வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.

அதில், தமிழில் பேசிய வீடியோவில் அவர் கூறுகையில், ‛‛தரமான படங்களையும், நடிகர்களையும் தாங்கி பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியது இல்லை. அந்த வெற்றி வரிசையில் என்னையும், எங்கள் 'விக்ரம்' படத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம்.

தம்பிகள் விஜய் சேதுபதி, பஹத் பாசில், செம்பன் வினோத், நரேன் என வீரியமிக்க நடிகர் படை இதற்கு முக்கிய காரணம்.

கடைசி 3 நிமிடங்கள் வந்து திரையரங்குகளை அதிர வைத்த தம்பி சூர்யா அன்பிற்காக மட்டுமே நடித்தார். நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாய் காட்டிவிடலாம். லோகேஷிற்கு சினிமாவிலும், என் மீதும் இருக்கும் அன்பு, படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும், படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. ரசிகர்களின் அன்பும் அவ்வாறே இருக்கிறது. உங்கள் அன்பு தொடர விழையும் ராஜ்கமல் இன்டர்நேஷனலின் ஊழியன், உங்கள் நான்'' என தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம் தனது மகிழ்ச்சியை பரிசளித்து கொண்டாடிவரும் சூழலில் ‘விக்ரம்' படம் தனக்கு ஏற்படுத்திய தாக்கம் குறித்து நடிகர் கார்த்தி தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில், ''அனைவரும் குறிப்பிட்டது போல் 'விக்ரம்' திரைப்படம் கமல்ஹாசனின் உண்மையான கொண்டாட்டம். அவரை திரையில் பார்த்தது பிரமிப்பாக இருந்தது. ஆக்‌சனும் காட்சியமைப்பும் சுவாரசியமான இணைப்புகள் மற்றும் ஆச்சரியங்கள் நிறைந்ததாக இருந்தது. பஹத் பாசில் தனது தீவிரமான நடிப்பை ஒருபோதும் கைவிடவில்லை. விஜய் சேதுபதி நெகட்டிவ் கதாபாத்திரத்தின் புதிய நிழலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அனிருத் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ஆபத்தான காட்சிகளை இன்னும் பெரியதாகவும், மீட்பவர்களை சக்திவாய்ந்தவர்களாகவும் மாற்றியிருக்கிறார். இறுதியாக... ரோலக்ஸ் சாரை பார்ப்பதற்கு பயமாக இருந்தார். லோகேஷ் உங்கள் ரசிக மனப்பான்மையை முழுமையாக பார்வையாளர்களுக்கு கடத்திவிட்டீர்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.

அதே போன்று ‘விக்ரம்’ திரைப்படத்திற்கு டூடுல் வெளியிட்டு கமல்ஹாசனை கெளரவப்படுத்தியுள்ளது அமுல் இந்தியா நிறுவனம்.

இந்தியாவின் முன்னணி உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான அமுல் நிறுவனம் 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசன் மேற்கொண்ட கெட்டப்பை அப்படியே அமுல் சின்னமான அமுல் பேபிக்கு கொடுத்து விளம்பரம் செய்துள்ளது. நடப்பு நிகழ்வுகளை வைத்து காட்ர்டூன் வரைந்து விளம்பரமாக வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இது வெளியிடப்பட்டுள்ளது.
SHARE