20ஆவது திருத்தச் சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்..!!!
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேற்பட்ட வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றம் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குழுநிலை விவாதத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெடுப்பிலும், இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் கிடைத்த அதே எண்ணிக்கையிலான வாக்குகள் திருத்தத்திற்கு ஆதரவாகக் கிடைத்தன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன், ஆளுந்தரப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதனைத்தவிர, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் ஆகியோரும் திருத்தத்திற்கு ஆதரவளித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இஷாக் ரஹ்மான், டயனா கமகே, எம்.எஸ்.தௌபீக், பைசல் காசிம், எச்.எம்.எம் ஹாரிஸ், அ.அரவிந்தகுமார் ஆகியோரும் இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
புத்தளம் மாவட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ஐக்கிய முஸ்லிம் கூட்டணியில் தெரிவு செய்த அலி ஷப்ரி ரஹீமும் திருத்தத்திற்கு ஆதரவளித்தார்.
எவ்வாறாயினும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்டோர் திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளும் திருத்தத்தை எதிர்த்து வாக்களித்தன.
குழு நிலை விவாதத்தின் போது, இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பிலான சரத்திற்கு தனியாக வாக்கெடுப்பு கோரப்பட்டது.
இந்த சரத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் ஆதரவாக வாக்களித்தார்.
எவ்வாறாயினும், இறுதி வாக்கெடுப்பின்போது அவர் இருபதாவது திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தார்.