Saturday 4 December 2021

எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படும் - பெற்றோலியக் கூட்டுத்தாபனம்..!!!

SHARE

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள நிலையில் எரிபொருள் விநியோக சேவையினை முன்னெடுக்கிறது.

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளாவிடின் எரிபொருளுக்கான வரியை குறைக்குமாறு நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம். நட்டமடைந்த நிலையில் தொடர்ந்து சேவையை முன்னெடுத்து செல்வது கடினமாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலக சந்தையில் எரிபொருள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலை அதிகரிக்கபடாத காரணத்தினாலும், ஏனைய காரணிகளினாலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கடந்த 10 மாத காலத்திற்குள் மாத்திரம் 7000 ஆயிரம் கோடி நட்டத்தை எதிர்க்கொண்டுள்ளது.

அத்துடன் இலங்கை வங்கிக்கும், மக்கள் வங்கிக்கும் சுமார் 400 கோடி வரையில் கடன் செலுத்த வேண்டியுள்ளது. தற்போது அக்கடன் தொகை பகுதி பகுதியாக செலுத்தப்பட்டு வருகிறது. பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவை நிவாரண விலைக்கு விநியோகிக்கப்படுகிறது.

எரிபொருளின் விலையை அதிகரிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பெற்றோலிய கூட்டுத்தாபனம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளது.

அவ்வறான நிலையில் ஒன்று எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டும் அல்லது எரிபொருள் இறக்குமதிக்கான வரியை குறைக்க வேண்டும் என நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்தாலும் தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலையை தற்போதைய நிலையில் குறைக்க முடியாது.

எரிபொருளின் விலையை நிலையாக பேணும் நிதியம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
SHARE