Friday 9 September 2022

யாழில். முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து மோதிரம் களவாடப்பட்டுள்ளது..!!!

SHARE

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து அவரது மோதிரங்களை களவாடி சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

வடமராட்சி பகுதியில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி , பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு சென்றுள்ளனர்.

வைத்திய சாலைக்கு சற்று அருகில் முச்சக்கர வண்டி சாரதியை காத்திருக்குமாறு கூறி வைத்திய சாலைக்கு செல்வது போன்று சென்றுள்ளனர்.

சில நிமிடத்தில் முச்சக்கர வண்டிக்கு திரும்பியவர்கள் , மென்பானங்களை வாங்கி வந்திருந்தனர். அதில் ஒன்றை சாரதிக்கு கொடுத்து விட்டு , மற்றையவற்றை தாம் அருந்தி உள்ளனர்.

பின்னர் பருத்தித்துறை நகர் நோக்கி செல்லுமாறு முச்சக்கர வண்டி சாரதிக்கு கூறியுள்ளனர். நகர் நோக்கி சுமார் 500 மீட்டர் தூரம் சென்ற நிலையில் தாம் இதில் இறங்க போவதாக கூறி இறங்கியுள்ளனர்.

அதன் பின்னர் சாரதி அவ்விடத்திலையே முச்சக்கர வண்டிக்குள் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் அவரின் மோதிரத்தை களவாடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

நீண்ட நேரமாக அப்பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று நிற்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற பருத்தித்துறை பொலிஸார் முச்சக்கர வண்டியில் மயங்கிய நிலையில் இருந்த சாரதியை மீட்டு , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

மயக்கம் தெளிவடைந்து பின்னரே சாரதி நடந்த சம்பவங்களை பொலிஸாருக்கு தெரிவித்து முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
SHARE