Friday 15 January 2021

47,683 பேரின் மாதிரிகள் யாழ்ப்பாணம் ஆய்வுகூடங்களில் பிசிஆர் பரிசோதனை; 644 பேரிடமே கொரோனா கண்டறிவு..!!!

SHARE


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 2020 மார்ச் தொடக்கம் நேற்றுவரை 47 ஆயிரத்து 683 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்கான பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களில் 644 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்ப்பட்டுள்ளது.

இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கொவிட் -19 தொற்றுநோய்க்கான சிகிச்சையையும் வழங்கி வருகிறது.

போதனா வைத்தியசாலையில் இதுவரை 41 ஆயிரத்து 248 பேருக்கும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 6 ஆயிரத்து 435 பேருக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

இந்த இரண்டு இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 644 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்ப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அபாயம் நிலவிக்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஏனைய சிகிச்சைகளையும் உரிய கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு செய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.

ஆகவே பொதுமக்கள் நீண்டநாள் வியாதி உடையவர்கள் குறிப்பாக உயர் குருதி அழுத்தம், நீரிழிவு, இருதய நோய் மற்றும் மேலும் பல நோய் உள்ளவர்கள் கிரமமாக அவர்களுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக கடந்தகாலப் பகுதிகளில் உயர் குருதி அழுத்தம் மற்றும் இருதய நோயுடைய ஒரு சிலர் உரிய நேரத்தில் வைத்தியசாலைக்கு வருகை தராமல் உயிரிழப்புகள் பதியப்பட்டு இருக்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

2020ஆம் ஆண்டு டெங்கு நோய் தாக்கத்தினால் 866 பேர் சிகிச்சைபெற்று வெளியேறி இருக்கின்றார்கள். இது 2019 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது குறைவாகவே காணப்படுகின்றது. 2019 ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 415 பேர் டெங்கு நோய் தாக்கத்தினால் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

எனவே தற்போது மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதால் டெங்கு பரவக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. பொதுமக்கள் விழிப்பாக இருப்பது அவசியமாகும் – என்றார்

SHARE