Saturday 16 January 2021

சுகாதார நடைமுறைத் தளர்வுகளை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள்- யாழ். அரச அதிபர் கோரிக்கை..!!!

SHARE

சுகாதார நடைமுறைத் தளர்வுகளை பொதுமக்கள் துஷ்பிரயோகம் செய்யாது தங்களையும் சமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலைமைகள் தொடர்பாக இன்று (சனிக்கிழமை) கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “யாழ். மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 183 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் கடந்த ஒக்டோபர் மாதத்தின் பின்னர் தொற்று நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, யாழில் தொற்றுக்குள்ளான 126 பேர் பூரணமாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலையில் ஆயிரத்து 415 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 598 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிவாரணப் பொதிகள் கட்டங்கட்டமாக தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த இரண்டு, மூன்று நாட்களாக யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை குறைவடைந்து செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இருந்தபோதிலும் அந்த நிலைமையினை நாங்கள் விழிப்பாக இருந்து கடந்து செல்லவேண்டும்.

எனவே, பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களைப் பேணி முகக்கவசம் அணிந்து தங்களுடைய வழமையான செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் நமக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமையிலிருந்து பாதுகாப்பாகக் கடந்துசெல்ல முடியும்.

இந்நிலையில், கொரோனா தொற்றினைத் தடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் சில யாழ். மாவட்டத்தில் தளர்த்தப்பட்டுள்ளன. பாடசாலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல், எதிர்வரும் காலங்களில் தனியார் கல்வி நிலையங்களை ஆரம்பிப்பதற்குரிய அறிவுறுத்தல்கள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், சினிமா திரையரங்குகள் மற்றும் வழிபாட்டு இடங்கள் போன்றவற்றில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைவிட கடந்த வாரம் தொடக்கம் மீன் சந்தைகள், அதேபோல் மூடப்பட்டிருந்த கடைகள் மீள திறப்பதற்குரிய அனுமதி சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதேபோல், நேற்றைய தினம் இடம்பெற்ற சுகாதார வழிகாட்டல் குழுவின் சிபார்சின் படி எதிர்வரும் திங்கட்கிழமை முதல், யாழ்ப்பாண மாவட்டத்தில் திருமண மண்டபங்கள் வரவேற்பு மண்டபங்கள் மற்றும் விடுதி மண்டபங்களை திறப்பதற்குரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியானது அந்த மண்டபத்தினுடைய கொள்ளளவில் 50 வீதத்திற்கு சமூக இடைவெளி பேணப்பட்டு, அதேபோல் அனுமதிக்கப்படக் கூடிய ஆட்களின் எண்ணிக்கை 150 எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், அங்கு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றி நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, உணவு பரிமாறும்போது சுயமாக பரிமாறிக்கொள்வது நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான வழிகாட்டல்கள் சுகாதாரப் பிரிவினரால் அந்தந்த தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனைவிட எதிர்வரும் 18ஆம் திகதி மூடப்பட்டிருந்த சந்தைகளை மீளத் திறக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே, அந்தந்த சந்தைகளுக்குப் பொறுப்பான உள்ளூராட்சி மன்றங்கள் அதற்குரிய சுகாதார வழிகாட்டலைச் சரியாகப் பின்பற்றி சந்தைகளைத் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தளர்வுகளை பொதுமக்கள் துஷ்பிரயோகம் செய்யாது சுயகட்டுப்பாட்டோடு தங்களையும் சமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டியது கட்டாயமாக இருக்கின்றது. இந்தத் தளர்வுகள் மக்களுடைய சிரமங்களைக் குறைப்பதற்கும் அவர்களுடைய வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்குமாகவே ஆகும்.

எனவே, பொதுமக்கள் எவ்விதமான அலட்சியப் போக்கையும் காட்டாது அனைவரும் ஒரு சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும்.

அத்தோடு, தற்போது சுகாதாரத் திணைக்களத்தினரால் மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்வோர் தனிமைப்படுத்தப்படத் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, அவ்வாறு செய்வதாயினும் தங்களுடைய அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தினைப் பொறுத்தவரை சுகாதாரப் பிரிவினர் மற்றும் ஏனைய பிரிவினரின் ஒத்துழைப்புடன் கொரோனா நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றோம். எனினும் இந்த நடைமுறையானது பொதுமக்களின் சிரமத்தைக் குறைப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்தல் தொடர்பாக வெளி மாவட்டங்களிலிருந்து வருவோர் தொடர்பாக தகவல்களைச் சேகரித்து அவர்களுக்குரிய வழிகாட்டல்களை வழங்குவார்கள். அத்தோடு, அவர்களை தனிமைப்படுத்துவதாயின் அதனை சுகாதார அமைச்சுக்குத் தெரியப்படுத்தி அவர்களின் அனுமதியுடன் தனிமைப்படுத்துவார்கள்.

மாவட்டங்களுக்கிடையில் பயணம் செய்வோரை சிரமத்துக்கு உள்ளாக்காதவாறு இந்த நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இந்தக் கட்டுப்பாடு முழுமையாக தளர்த்தப்பட்டதாக ஏற்றுக்கொள்ள முடியாது.

வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பது தொடர்பாக சுகாதாரப் பிரிவினர் வழிகாட்டுவார்கள். எனவே, வெளி மாவட்டங்களுக்குப் பயணங்களை மேற்கொள்வோர் தமது பயண விபரங்களை சுகாதாரப் பிரிவினருக்கு வழங்குவதன் மூலமே அதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுக்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
SHARE